Tuesday 24 September 2013

சிதம்பர சக்கரம்


              சிதம்பர சக்கரம்


சக்கரத்தைப் பேய்கள் நின்று சுற்றி சுற்றிப் பார்த்துமென்ன    
சக்தி நீதி தெய்வசீலம் கண்டிடுமாமோ
பக்தி கொள்ளும் கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்து விட்டதன்பாடோ
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிநான்கும் சுற்றிவந்தும்
வேண்டுமெங்கள் வாழ்வுகாணும் வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் போற்றிவாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா  அன்னை தம்பி தங்கை  ஆசையோடு கூடியாடி
ஆண்டுகளாய்க் கொண்ட வாழ்வு போய்விடலேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டிதீயர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது முண்டோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டமாக்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிரமா  தித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கலுக்கு நீர்குடிக்க  வேண்டியவர்க் கீதலன்றி
விட்டுமவர் துடிதுடிக்கப் பார்த்திடல் ஏனோ
அக்கம்பக்கம் யாரிருந்தும் ஆற்றுஞ் செயல் அலைகடலை
அத்துமீறீ வந்திடுமென் றானது கனவே
சுக்கு மிளகு திப்பிலியில் சுட்ட காய்சல்போக்கிடலாம்
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுவன்றோ

எத்தனை நாள் காத்திருந்து ஏடெழிதிப் பாட்டிசைத்து
என்னசுகம் கெட்டவர்க்கு சுற்றிடுமுலகே
அத்தனைக்கும் பக்கதாளம் அங்கிருந்து போடுதய்யா
ஆடுபலி கொள்ள முன்னர் ஆக்கிடுமிசையோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

No comments:

Post a Comment