Sunday 27 October 2013

கண்ணே கண்ணுறங்காய்

சித்திரமே  செங்கரும்பே சேர்ந்தாடும் மல்லிகையே
நித்திரையைக் கொள்வையடி  நீர்விழிகள் ஊற்றுவதேன்
இத்தரையில் நீபிறந்தாய் ஈர்விழிகள் கண்டதெலாம்
அத்தனையும் துன்பமடி ஆறிமனம் கண்ணுறங்காய்

புத்திரியே பூமகளே பொல்லாயிப் பூமியிலே
கத்தியழும் காட்சிகளே  காலையிலே சேதியடி
நித்திரையில் கண்ணயர்ந்தால் நெஞ்சமெலாம் பதறியழக்
கத்தியும் கொண்டோர் உருவம் கனவிலெனைத் துரத்துதடி

பத்திரிகை கையெடுத்தால் படத்துடனே வெடிகுண்டால்;
இத்தனைபேர் போனதென  எண்ணிக் கணக்குரைப்பர்
சத்தமிட்டு அழுபவரும் சித்தமழிந் தாடுமிடம்
புத்தொளிவண் ணத்தொலைகாண் பெட்டிதரும் காட்சியடி

நித்தம்விழி காண்பதிலே நொந்துமனம் துடிதுடித்து
கொத்தும் விசஅரவமெனக் குலைநடுங்க வைக்குதடி
நித்தம் வருஞ் சேதியினை நீமறந்து கண்ணுறங்கு
அத்தனைக்கும் நீவருந்த ஆவி துடித்தஞ்சுமடி

சத்தியத்தின் ரூபமற்ற தத்துவமும் என்ன படி
மத்தியிலே அன்புஎனும் மாமருந்தே தேவையடி
சுத்தமென வாழ்நெறிகள் சொல்லிமனம் காப்பதற்கு
உத்தமரோ இவ்வுலகில் உள்ளனரோ .ஐயமடி

பெற்றவரின் குற்றமதோ பிள்ளைகளோ நாமறியோம்
குற்றமிடும் காட்சிகளில் கொண்டவரைத் தூண்டிவிட
பற்றெழத்துப் பாக்கியினைப் பெற்றழிக்கும் நாயகனை
முற்றும் முழுத்திரையினிலே  முன்னெடுத்துக் காட்டுகிறார்

அற்றதிங்கே நீதியென அழுதுமென்ன ஆரமுதே
தொற்றியதோர் நோயாகித் துடிக்கு முயிர் வதைப்போரும்
இற்றைய நாள் தீரரென இம்சையிட்டுக் கொல்கலையை
பற்றியவர் வீரரெனப் பாரில் புகழ்ந் தேற்றுவதோ

கற்றறியக் கணனியொன்றைக்  கைமடித்துத் தூக்கவெனப்
பொற்குலத்துப் பிள்ளையர்க்குப் பொருள்வழங்கப் போதைதரும்
உற்றதொரு குருதிதெறித் உடலமதில் குண்டு துளைத்
தற்றுயிரும் வீழ்த்துகின்ற தகமை பெற விளையாடி

பற்றெழவும் பாவியுடல் பதைபதைத்துக் கொல்வதினைச்
சுற்றுலகில் நாயகனாய் சொல்லாமல் உணர்வூட்டும்
வெற்றுலகின் வன்மைதனை விதைப்பவரோ பேருலகின்
முற்போக்கு வாதிகளும் மேலுலகாம் என் செய்வேன்

வித்தை யொன்று மில்லையடி வேந்தன் எனில் சொல்லும்வகை
உத்தரவென் றாணையிட  ஊரையெலாம் கொன்றொழித்துப்
பைத்தியமாய் தேசமெலாம் படை நடந்த கேவலத்தை
சத்தியத்தின் செய்கையென சாற்றுவதும் வேடிக்கையோ

கொல்லுமொரு கொலைவெறிக்கு கூடியிந்த உலகமெலாம்
நல்லோர் பொற்கிழி யளித்து நாட்டியமும் ஆடுதெனில்
இல்லார் குணமெடுத்தோர்  இயல்புடை நல் லோரெனவோ
எல்லாமோ எண்ணி விழி ஈரமெழ நீயழுதாய்

பொற்குவையே பேரழகுப் பேறேயென் புதுநிலவே
சொற்றமிழின் நற்கவியே சுந்தரமென் இதழ்குவித்து
வெற்றுவிழி செவ்வானச் சிவப்பெடுக்க நீயழுதால்
பெற்ற மனம்நோகுமடி பேசாமல் கண்ணுறங்காய்

******************************

என்னாவேன்

தேடிப் பார்த்தேன்  திக்கெட்டெங்கும்
  தெரியா விடைகொண்டேன்
ஓடிக் கேட்டேன் ஓடைநீரில்
  உலவும் அலை கேட்டேன்
நாடிக் கேட்டேன் நாளும் மலரும்
  நல்லோர் எழில்பூவும்
வாடிக்கீழே வீழுந் தன்மை
 வகையேன் விடைகேட்டேன்

கூடிக் கைகள் கூப்பித் தெய்வக்
  கோவில் உள்நின்றேன்
ஆடித்தெய்வம் முன்னே நின்று
  அருளே விடைஎன்றேன்
மூடிக் காதில் மொழிகள் அறியா
  மௌனத்தில் கேட்டேன்
சாடிப் பார்த்தேன் தெய்வம்மீது
  சலனம் எதுகாணேன்

சூடிக் கொண்டோன் பிறையைக் கேட்டேன்
  சோதிக் கனலாகி
வேடிக் கையாய் உலகம் சுற்றும்
  வெயிலை விடைகேட்டேன்
பாடிக் கேட்டேன் பாரில் தோன்றும்
 பருவந் தனைக்கேட்டேன்
சோடிக் குயிலைக் கேட்டேன் சுற்றும்
  காற்றை விடைகேட்டேன்

நானாய் இன்றும் கண்டேன் நாளை
  நானும் என்னாவேன்
தேனாய் மொழியும்பேசித் திடமும்
   திகழும் மனங்கொண்டேன்
கூனாய் குறுகிக் கோலும்கொண்டு
  கிடந்தும் உழன்றேன்பின்
தானாய் எரியும்தீயில் வேகுந்
  தருணம் என்னாவேன்

நெஞ்சில் கொண்டேன் நினைவாம் ஆற்றல்
  நிர்க்கதி யாய்போமோ
அஞ்சா வீரம் அகந்தை தோல்வி
  அலையும் சிறு உள்ளம்
கொஞ்சல் கோபம் கேளாத் தன்மை
  கொண்டோர் பிடிவாதம்
பஞ்சம் பாடு பலவும்கண்டேன்
  பனியென் றழிவாமோ

வெள்ளை நிறமும் விடிவான் செம்மை 
  விளங்கும் ஒளிகண்டேன்
கொள்ளை எழிலார் குழலாள் மங்கை 
  குலவும் சுகம் கொண்டேன்
பிள்ளைமேனி பிறப்பும் கொண்டோர் 
  பிணைப்பும் இவையாவும்
தெள்ளத் தெளியும் வகைபோம் இடமும்
  தெரியாப் போமாமோ

எங்கும்மௌனம் இழைந்தோர் அமைதி
  எதுவும் நிசப்தம், வான்
தங்கும் கோளத் தரையும் மௌனத்
  தணலைச் சுழன்றோடும்
கங்குல் இடையே கனத்தோர் வெடியும்
  கரையும் ஒளிவெள்ளம்
மங்கும் வகையும் கண்டேன் எண்ணம்
  மயங்கும் விடைகாணேன்

மனங்கொள் நினைவும் மதியும் ஆற்றல்
 மகிழ்வும் கண்டோம் நாம்
கனங்கொள்  உணர்வும் கற்பனை கொண்டும்
  காலம்பல ஆண்டாய்
சினம்கொள் விடிவும் சீற்றம் என்றே
  சேர்த்தே சிறுவயதின்
நினைவும் கொண்டோம் நீங்கும்போதில்
  நெஞ்சம் என்செய்யும்

தேடியதும் நாடுவதும் (1ம் பகுதி)

உள்ளம் பிழிந்தினி சொல்லுங் கவிதைக்கு
உட் பொருள் தேடி நின்றேன் -  ஒரு
கொள்ளை எழில்மலர் கூடிப்பொ லிந்தபூங்
காவினுள்ளே நடந்தேன் -அங்கு
அள்ளும் மனதெழில். ஆனந்தபோதைகொண்
டாட மலர்கள் கண்டேன்- இனி
கள்ளினைத் தேக்கிய வெண்மலர்காள் ஒரு
கற்பனை தாருமென்றேன்

வெள்ளை மலரொன்று வேடிக்கை நோக்குடன்
விந்தை உணர்வு கொண்டு  -ஏது
தெள்ளத் தெளிவின்றி கூறுவதென் உந்தன்
தேவையும் என்னவென்றாள் - ஆகா
அள்ளக் குறைவற்ற பேரழகி நானும்
அன்னைத் தமிழ்க் கவிக்கோர் - நின்றன்
கள்ளின்சு வையொத்த உட்பொருளில் ஓரு
கற்பனை தேடுகிறேன்

நள்ளிரவில் மின்னும் தாரகை போலந்த
நன்னெழிற் பூவருகில் - மெல்லக்
கள்ளச் சிரிப்பென்றைக் காற்றில்விடுத் தயல்
காணும் சிவந்தமலர் - விரல்
கிள்ளிவிட்ட கன்னச் செம்மையுடன் கண்டு
கற்பனை யாமறியோம் -  இங்கு
உள்ள தெல்லா முண்மை தானறிவோம் அதில்
என்றும் மலர்ந்தோ மென்றாள்

எள்ளவும் துய ரேதுமற்ற அந்த
இன்மல ரண்டை விட்டு - கரம்
அள்ளிச் சிறுபிள்ளை குங்குமமும் கொட்டி
அப்பிய கன்னமென - தரும்
உள்ளமதில் அச்சம் ஊற்றெழவே கதிர்
ஓடியெழ முன்னதாய் -பெரு
வெள்ளமெனச் சிவந் தோடும் முகில் கண்டு
விண்ணை ரசித்து நின்றேன்

வெள்ளிக் கொலுசுகள்  துள்ளிக் குதிக்குமவ்
வேளை தனில்எழுமே - அந்த
அள்ளிச் சிதறிடும் ஆரவாரத்தொடு
ஆலமரக் கிளை யில் - சிறு
புள்ளின கூட்டமும் புத்துணர்வில் வானம்
போகுமவ் வேளையிலே -அயல்
தள்ளியோர் புள்ளிசை கானம்படித்துப் பின்
தம்மினம் சேரக்கண்டேன்


(குருவி பாடியது)

நெல்லிருக்கும் தேசம் தேடிப் போகிறோம் - இந்த
  நீல விண்ணிலே எழுந்தே ஏகுவோம்          
நல்முதிர்ந்த நெற்கதிர்கள் கண்டிடில் -அதை
 நாடியுண்டு வீடு வந்துசேருவோம்
இல்லையென்ற கற்பனைக்குள் மூழ்குவோம் - இன்னும்
  எல்லையற்று நாடுதாண்டி ஓடுவோம்
அல்ல லற்ற ஆனந்தமாம் வாழ்விலே - கண்டு
  அன்பு கொண்டும் ஒன்றுகூடிக் காண்கிறோம்

நல்லவர்தம் நாட்டில் நின்று பாடுவோம்- அந்த
 நாட்டிலெங்கும் பச்சைவளம் காண்கிறோம்
அல்லவரின் தேசம் கூடச் செல்கிறோம் - அங்கு
 அன்னமின்றி ஏங்கும் மக்கள் நோகிறோம்
சொல்லவல்ல தூயமனம் கொண்டவர் - எங்கும்
 தோல்விகொள்ளத் தீயவர்கள் வெல்வதும்
எல்லயற்ற கற்பனை இல் உண்மைதான் - கண்டு
 ஏங்கி விழி சோர்ந்து வீடு செல்லுவோம்
********

சின்னக்குருவியின் செந்தமிழ் பாட்டினில்
 சிந்தை பறிகொடுத்தேன் -அது
என்னவிதம் அந்தக் கற்பனை வான்வெளி
 காணவென் றாசை கொண்டேன்
மின்னும் வெளிதனில் யான் பறந்தால் வரும்
 மேனி சிலிர்ப்பினிலே -நல்ல
இன்கவிதை வரும் வானெழவா என்றேன்
 அன்னையா கட்டுமென்றாள்

(அடுத்ததில் முடியும்)

தேடியதும் நாடுவதும் ( 2ம் பகுதி)


***********( விடியலுக்கு சற்றுமுன்)

கள்ளச் சிரிப்பொடு கண் சிமிட்டுமந்த
   காரிருள் விண் மிளிர்மீன் - நல்ல
வெள்ளி மணிச்சரம் கட்டறவே மணி
  வீழ்ந்து சிதறியதாய் - அதை
அள்ளி யெடுத்திட ஆளில்லையோ எனும்
  அந்தர வான்வெளியில் -நிலா
துள்ளி நடமிட துன்பமிட்டே அவள்
   தேகம் மெலிந்ததுவோ

தள்ளிக் கிடந்தது தாமரை நீரென 
  தண்ணிலா வான்.குளத்தில்-  அதைக்
கொள்ள வைத்தாரெவர் கேடெழுந்தோ குறை
  கொண்டிருக்கக் கதிரும் - பெரு
வள்ளலைப் போலொளி வாரிஇறைத்ததில்
  வாடியதோ நிலவும் - அட
கொள்ளென அச்சம் கொடுத்ததுயார் ஏனோ
  கோலமதி மறைந்தாள்


நள்ளிரவில் நடந்தோடியதால் நடை
  நாளில் மிக அருகி - ஒரு
வெள்ளை முகில்தனும் மெல்லநடந்துமோர் 
  பிள்ளை வடிவெடுத்தான் - என்
உள்ளமதில் பிள்ளை ஆசைகொண்டே  கொள்ள
  ஈர்கரம் நீட்டுங் கணம் - அங்கே
குள்ள மனம்கொண்டோர் கானகத்து விலங்
  காக வடிவெடுக்க

செங்கமலம் விழி கண்டு மலர்ந்திடச்
  செவ்வழல் சூரியனோ - அந்த
பங்கயம் மீதயல் பட்டுமலர்களும்
  பட்டொளி வெம்மையிட - பூவின்
அங்க மிதழ் நோக அல்லி புறஞ்சொல்ல
  அம்புயம் கர்வமுடன் - போடி
எங்கும்புகழ் கொண்டோர் இப்படித்தான் உந்தன்
  எண்ணம் தவிராய் என்றாள்

எட்ட யிருந்தொளி ஆதவனோ அங்கே
  என்னைக் கண்டுசினந்தான் -  அட
வெட்ட வெளியிடை கற்பனை தேடிடும்
  வித்தகர் இங்கு வாரும் - கொள்ளத்
தெட்டத் தெளிவொடு சேதிசொல்வேன்
  அதைத் தேடியுமென்ன பயன் -இந்த
வட்டப் பெருங் கோளம் வாழு முலகினில்
  வன்மைகள் மெய்யுரைப்பீர்

கெட்டுகிடக்குது பூமியென்றேன் - அந்த
`  கீழ்நிலையென்ன சொல்வேன் -இனி
பட்டுத் தொலை என்றே ஆண்டவனும் விட்ட
  பண்பினை நானுரைத்தேன் - ஒரு
கட்டுப்பாடு இன்றிக் காணுது வன்மைகள்
  காரணம் ஏதறியேன் -கதிர்
சுட்டுப் பொசுக்குவேன் தீயெடுத்தே எங்கே 
  சொல் லெனத்தான் சினந்தான்

தெட்டத் தெளிவொரு சேதிகொள் பூமியில்
  தேசமனைத்து மன்பை - இன்று
விட்டுக் கிடக்குது வாழ்க்கையென்ப தங்கு
  வீதியில் பெண்ணினத்தை - வெகு
மட்டமெனக் கொண்டு மங்கை இழிந்தவள்
  மாதெம் அடிமையென்றே - பலர்
கொட்ட மடித்துக் குதறுகிறார் அந்தக்
 . கீழ்மையை என்னுரைப்பேன்

சட்டமுண்டாம் என்று சொல்லி அவர் செய்யும்
  சஞ்சலக் கேடுகளை - தானும்
தொட்டெழுதிக் கவி செய்துவிட்டால் இந்த
  சூழ்நிலை மாற்றமில்லை - இது
கட்டுடைத்து கரையின்றி பெருகிடும்
 காட்டாற்று வெள்ளமது - இதில்
இட்டவிதி யென்று ஒன்றுமில்லை  அங்கு
  ஏதுசெய்வ தறியேன்

தட்டிக் கொடுத்தலும் நல்லவரைத் தர்ம
 தேவனரு கழைத்து - அவர்
நட்டுவளர் மரம்போல வளமொடு   
  நாட்டில் நிலைக்க விட்டு -நீயும்
தொட்டு மைகொண்டே கவியமைப்பாய் அந்தத்
 தூய கடமை விட்டால் - இடை
சுட்டது சட்டியென் றுன்கரமும்விட்ட
 சேதியென் றாகுமன்றோ

நெட்டிமுறித்துக் கை நீளச் சொடுக்கிப்பின்
  நேர்முகங் கொண்டவனைக் - கண்டு
தட்டிக் கேட்க எங்கே தர்மமுண்டு நீதி  
  தூங்குது வேடமிட்டு - அதைச்
சுட்டுத் துயில்கலைத் திட்டபணி கொள்ளச்
  செய்வதுன் வேலையென்றேன் - இதை
மட்டும் முடிவதென் றெந்த வழிதனும்
  என்னிடமில்லை யென்றேன்

கற்பனையைத் தேடிநான் பறந்தேன் அந்தக்
  காற்று வெளியிடையே - அந்த
அற்புத வான்ஒளி சொல்வதையும் மன
  ஆழத்திலே எடுத்தேன் -மண்ணில்
நிற்பதுவும் நிலை கொண்டதுவும்
  நிலையற்றுத்  தவித்திருக்க - எந்தன்
சொற்பதங்கள் தனைக் கற்பனையாம் வண்ணத்
  தூரிகை கொண்டமைத்தேன்

காற்றில் வரும் கனவுப்பெண் (சின்னத்திரை)

நேற்று நடந்தாள் இன்று நடந்தாள்
நாளையும் நடைகொள்வாள்
காற்றினில் வீழும் மென்னிலைபோலும்
காலத்தி லசைகின்றாள்
ஊற்றிடும் அருவி போல்மொழி பகர்வாள்
ஒளிவிழி குளமாவாள்
ஈற்றினில் போகும் இடமென்னஅறியேன்
இதயத்தின் துடிப்பாவாள்

ஆற்றென நீர்விழி பொழிகின்றாள் அவள்
அழுகையின் மெருகேற்றி
கூற்றினில் வன்மையும் கொள்ளுகிறாள் இக்
குணவதி நிலைமாறி
தோற்றமும் அன்பெனும் பண்புடையாள்  இங்கு
துயரமே கதியாகி
ஆற்றலும் தீரமும் கொண்டவளோ அதை
அழிவுக்கு துணையாக்கி

சேற்றிலும் வளரும் தாமாரையாம் இவள்
சிறுகுளம் சேறாக்கி
மாற்றமென்றே மனை ஆளுபவள் பெரும்
மாயைகொள் கதைபேசி
வேற்றுமனம் வினையாக்கலென பல
விந்தைகொள் பெண்ணாகி
ஏற்றமும் தாழ்வு மிழைத்தவளாம் அயல்
இன்குடி கெடுக்கின்றாள்

சீற்றமும் கொள்வாள் சினந்தெழுவாள் இவள்
செய்வினை கொடிதாகும்
கூற்றுவன் வேலை கையெடுப்பாள் நிதம்
கொடுமையில் மனையாளும்
பேற்றுடையாள் பெரும் வாக்குடையாள் ஏன்
பிணியொடு நினைவாகி
தோற்றமும் கொள்வாள் ஒளிக்காட்சித் தொலைத்
தொடர்களின் இளவரசி

******************

Tuesday 22 October 2013

சக்திதாயே ! (அருள்வேண்டி)

எண்ணுக்குள் கூட்டல்என்றும்
. எழுத்துக்குச் சேர்ந்தேசொல்லும்
. இயல்பென்றும் ஆக்கும் தெய்வமே
கண்ணுக்குள் ஒளியின் ரூபம்
. கருத்துக்கு மொழியின் ஆக்கம்,
. காலத்தின் போக்கென் றாக்கியும்
பண்ணுக்கென் றிசையும் ராகம்
. பருவத்தில் பெய்யும் மேகம்
 பரவசங் கொண்டோர் மேனியும்
வண்ணத்தில் எண்ணம்கொண்டே
. வாழவும் செய்தே தீமை
. வழிநடந் தேகச் செய்ததேன்

விண்ணுக்குள் எரியும் சக்தி
. வியப்பிற்கு வழியும்கோலி
. வெறுமைக்குள் பொருளென் றானவள்
வண்ணத்து மலர்கள்பூத்தும்
. வளர் குறை நிலவும் ஓடி
. வருடுங்காற் றசையும் மென்மையும்
திண்மைகொள் வகையில் வாழ்வும்
. தெளிந்திடும் தன்மை தீரம்
. தினம் புதுத் தென்பும் தந்தபின்
மண்ணுக்கென் றாசைப்பட்டு
. மடமைகொண் டுயிரைவாங்கும்
. மாந்தர்செய் தேனோ விட்டனை

கண்ணுக்குள் கனவென் றின்பம்
. கற்பனை மகிழ்வென் றுள்ளம்
. காணென்றும் செய்தாய் பின்னரோ
உண்மைசொல்  அழிவென்றாக
. உறவுக்குள் வலிமை சோர
. உரிமைக்குப் பஞ்சம் வைத்ததேன்
பெண்ணுக்குள் கருவென்றாகிப்
. பின்னர் வந்தழுதே வீழும்
. பிணிகொண்ட வாழ்வை ஈந்தனை
அண்மைக்குத் துணையைக் கொண்டு
. அன்புக்குள் மடமைகண்டு
. அழியென்று விதியும் செய்ததேன்

உண்ணென்றே உலகில்பயிரும்
. உயிரென்று மூச்சில் காற்றும்
. உள்ளத்தில் நெகிழென் றுணர்வாக்கி
புண்ணுக்குள் தீயை வைக்கும்
. பெருந் துயர்கொண்டே யுழலும்
. பேரழிவொன்றே உடமைகொள்
அண்மையென் றாக்கி துன்பம்
. அதுகொண்டும் வாழும்போதே
. அறிவற்ற மூடர் அயல்செய்தே
எண்ணத்தில் தீதே கொள்ள
. எட்டாத வெளியில் நின்றே
. ஏன்செய்தாய் எங்கள் அன்னையே

வெண்மைக்கென் றுள்ளம்செய்து
. விருப்புக்குள் நீதி கண்டு
. வியனுறு தமிழை மொழியாக்கி
தண்மைகொள் மனமும்தந்து
. தரணிக்குள் இனமென்றாக்கி
. தவித்தழி அந்தம்கொள்ளென்றே
உண்மைவாய் நஞ்சும் ஊட்டி
. உயர்வென்னும் வேரைவெட்டி
. உலகில் யாம் நிலையாத் தன்மையும்
விண்ணுக்குள் நின்றே செய்தாய்,
. விடிவுக்கென் றொளியைத் தந்தாய்
. வீணுக்கென் றெம்மைச் செய்ததேன்

. இளைய சந்ததியே

மனமெங்கும் குதித்தாட 
...மகிழ்வோடு நிதம்காணும்
...மணிவண்ண ரூபங்களே - உங்கள்
இனமிங்கே உயிரோடு   
...இயல்பான வகைவாழ
...இகம் மீது உதவுங்களே - எங்கள்
சனம் அங்கம் தனையீந்து 
...தலையின்றி உடலின்றி
...சருகாகும் குறை வாழ்விலே - நாமு
கனமோடு உயர்வான 
...சமுதாயம் உருவாகக்
...கனவொன்றை நிசமாக்குங்கள்

பொழிலாடும் மலரோடு 
...புதிதாக வரும்காற்று
...பொழுதோட உறவாடிடும் - அதில்
எழிலோடு மயிலாட 
...இசைபாடும் இன்பங்கள்
...எமைக்கூடி மகிழ்வாக்கவும் - வெறும்
பழியோடு காண்போரின் 
...பரிதாப நிலைநீங்கி
...பாரெங்கும்  வளம் கொள்ளவும் - எமை
விழிநோக்கி உயர்வென்ற 
...வகையிலோ  ரிடம்தந்து
...விடு என்று  வாழ்வீந்தனை

விழுந்தோமின் றெழுவேமா 
...விதியென்று கொள்கின்ற
...வெகுவான துயர் மாற்றவும்
அழுகின்ற மனம் துள்ளி 
...அகமோடு புறம்யாவும்
...ஆனந்தம் குதித்தாடவும்
பொழுதன்று தமிழெங்கும் 
...புகழோடு பெருமையிற்
...பொலிந்தாடும் வளம் கொள்ளவும்
முழுதான தொருநல்ல 
...வழிகண்டு வாழ்வோரின்
...மூச்சினை மீட்டிடுங்கள்

தமிழ் பேசிப் பிறந்தோமே 
...தமிழ் கூறி வளர்ந்தோமே
...தமிழ் கற்று உயர்வாகினோம் -இன்னும்
தமிழென்ப அழிவில்லை 
...தரம்கொண்ட மொழியென்பர் 
...தன்னம்பிக் கைகொள்ளவும் -என்றும்
இமைமூடி இதயத்தில் 
...எமையாளும் பெருந்தீயின்
...எழும் சக்திதனை வேண்டிடு - இன்றே
அமையுமுன் பெருவாழ்வில் 
...ஆற்றலும் உயர்சக்தி
...அதை கொண்டுன் மண் மீட்டுக்கொள் 

ஒன்றெனக்கூடு உரிமையை வெல்லு

மலர்களிலே எத்தனைதான் மணமிருந்தாலும்
மாற்றமில்லை மலர்வதென்ற வகையி லொன்றாகும்
புலர்வதிலே எத்தனைதான் பொழுதுவந்தாலும்
பூமியிலே காலையின் புத் துணர்வில் ஒன்றாகும்
உலர் விழிகள்  வழிந்தழுது துன்பங் கொண்டாலும்
உலகிலெங்கும் இரங்குபவர் இல்லையென்றாகும்
சிலரதிலே துயர்தரவே தீமைசெய்தாலும்
செல்வழியில் நேர்மைகொள்ளு, தீரம் உண்டாகும்

இசைதனிலே பலவகையில் ராகமுண்டாகும்
இதயமதில் உணர்வினிமை என்றுமொன்றாகும்
தசையினுள்ளே தமிழ்கலந்து குருதி சென்றாளும்
தருணமதில் வீரமொன்றே விளைவெனக் காணும்
அசைவதிலே விதியுமொரு பக்கம் நின்றாலும்
அதை வெல்லவே மனது ஒன்றா யாகிடவேண்டும்
வசைசொல்லியே வரும்சிலரால் வாழ்வு துண்டாகும்
வழிமறித்து மதியுரைத்து வென்றிடவேண்டும்

திசைகள்தொறும் வழிகள்பல தனியேசென் றாலும்
செல்லும் வழி முடிவினிலே ஒன்றிட வேண்டும்
விசையுடனே விரைந்து செலும் வில்லம்பு போலும்
விளைவினிலே விடுதலையாம் இலக்கது வேண்டும்
பிசையுமுளத் துயர்களைந்து பெருமை கொண்டாடும்
பிறவிதனை இழிமை செய்வர் புறமுதுகோடும்
கசையடிகள் காணுமுடல் கனிவென மாறும்
காலமெனும் ஒன்றையினிக்  காணுதல் வேண்டும்

நிலைமை வரும் மகிழ்வுடனே நிலமதை மீட்கும்
நேரமதில் நெஞ்சலையில் நீந்திடும் வெள்ளம்
கலை பலதென் றாயிருந்தும் காண்பவர் உள்ளம் 
காட்சிதனைக் காணுகையில் களிப்பதே மிஞ்சும்
குலைகளிலே கனிகள் பல கூடுதல்போலே
குறியைஎண்ணி ஒற்றுமையாய் குழுமிடல் வேண்டும்
இலை குணங்கள் ஒன்றெனவும் இருந்திடும்போதும்
ஏற்றமுடன் தமிழ்நினைந்தே உழை -- நிலம்மீளும்


******************
சென்றாளும் - சென்று ஆளும் உடலை

நடு ஆற்றில் கைவிடுவோமா?

கலையோடு அமுத தமிழ் கற்குமிளஞ் சிறுவர்காள்
கதையொன்று சொல்வேனாம்  கேளீர்
அலைந்தோடி வாழ்கிறோம்ஆழிதிரை போலிங்கு
அமைதிக்கு  ஏன் வாழ்வில் பஞ்சம்
தலைபோகும் நிலையாகத்  தீதெமைக் கொள்ளவே
தாங்கா நிலம் விட்டலைந்தோம்
மலைபோலத் துன்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம்
மலைத்துமே  மலைபோலும் நின்றோம்

அழகுசெந் தாமரைகள் ஆடிடும் குளநீரில் 
ஆதவன் மின்னிடும் வண்ணம்
பழகுசெந் தமிழ்கொண்ட பைந்தமிழ்ப் பாவொன்றைப்
பாடுங் குரல், இளங்குயிலின் கீதம்
உழவு செய் துண்டவனோ உல்லாசங் கொண்டயலில்;
ஊய்..ஊய் என்றோட்டி உழுமழகும்
குழவியதன் கூட்டிலே தேன்சொரிந்து கீழுற்ற
குடித்துமே கூத்தாடும் மந்தி

எழும் அழகு ஈழத்தி லிருந்தபோ தெம்வாழ்வும்
இனித்திட இனித்திடப் பாகாம்!
வளவுவயல் தோட்டமுன் வாய்க்கால் வரம்புடன்  
வற்றிய குளத்திலோர் தவளை
முழமெழுந்து பாய்கின்ற முயலோட பாட்டாக
முன்வீட்டில் குழந்தையழும் சத்தம்
முழவொலிக்க வீதிவரும்குமரன்திருக் கைவேலும்
முந்நான்கு கண்பார்த்தே அருளும்

நிலவினொளி வீழ்முற்றம் நிர்மலத்து வானங்கீழ் 
நீட்டியகை சோற்றுருண்டைஅம்மா
கலகலத்துப் பேசுமொலி கனிவான உள்ளமதில்
கனவெழுந்த தூக்கமும் கண்டோம்
மலமலென விடிபொழுதும்  மலர்களதன் வாசமெழ 
மனம்பூத்த நடை, பள்ளிசெல்லும்
பலசிறுவ ரென்றுசிறு பயமற்ற சீர்வாழ்வும்
பளிங்கென்ற நீரோடைகாணும்

இருந்தநிலை ஒன்றுண்டு இன்பமுடன் வாழ்ந்தின்று
எழுந்தபகை அழிந்த நிலம் என்று
உருவழிய உறவோட ஊர்கலைந்து வந்தோமெம் 
இனியவர்கள் உங்களையும் என்று
கரும்பின்சுவை வாழ்வதனிற் கலந்துவிட வைப்போம் நாம் 
கைதவறி நதிவீழ்ந்த மலராய்
வருமொளியை எதிர்பார்த்து அலைசுழலில் புரளும்விதி
விடியலினைக் காணும்நாள் என்று??

************

பூவாக மலரச்செய்

நீயே சக்தி நிறைவா யெங்கும்
நினைவில் அன்பைத்தா
காயாய் அன்றிக் கனியா யினிமைக்
கவிதை வளமும்தா
தாயே உன்னைத் தினமும் வேண்டித்
தவித்தேன் துவளாமல்
வாயால் இன்பத் கவிதை சொல்லும்
வளமும் வரமும் தா

சேயாய் என்னைத் தினமும் காலை
தென்றல் போல்நீவி
பாயாய் படரும் பச்சைப் புல்மேல்
பனியின் குளிர்கொண்டு
தீயாய் சுடரோன் செம்மை, வானத்
திங்கள் செய் குளுமை
தா யார் எந்தன் தமிழின்கவிதை
தன்னைக் கண்கொண்டால்

தோயாதுன்பம் துய்த்தலின்றித்
திகழும் கவியின்பம்
தேயா தினிமை சேர்ந்தோர் பாகாய்
தித்திப் பெனவாக்காய்
ஓயா தூற்றும் அருவிக் சாரல்
அதனில் கீழ்நின்றே
தூயோர் இன்பம்கொள்ளல் போலும்
தொன்மை வளமும் தா

சாயா விதியும் சரியா மனமும்
சாகாதுடல் கொண்டே
நீயாய் எந்தன் நினைவில் வந்தே
நீந்தும் அலைதானும்
ஒயா துள்ளும் அழகும் கொண்டே
உவகைப் பெருக்கோடு
காயாதென்னைக் காப்பாய், இன்பக் 
கவிதை  வளமும் தா 

கூவாக் குயிலும் குதியா நதியும் 
கொட்டா மழைமேகம்
தாவாக் குரங்கு தழுவாப் பிள்ளை
தனிமைச் சுகமில்லை
ஏவாய் என்னை எட்டும்வரையும்
இன்பத் சுனை யாக்கி
நீவா, கருணை நேரும் வாழ்வில்
நிதமும் கவிதை தா

***************

தாயே அன்பு கொள்வாய்!

இயக்காத காலும் எழுதாத கையும்
இருந்தென்ன போயென்ன தாயே
தயங்காத நெஞ்சும் தவிக்கின்ற உள்ளம்
தந்தென்ன நொந்தேனே நானே
பயந்தாடும் போக்கில் பகலென்ன அந்தி
பனிபொங்கும் இரவென்ன தாயே
சுயமின்றி ஆடும் சுந்தரன் உள்ளம்
சுகம்தந்து அருள் கொள்வை யாமே!

வயதுண்ட தேகம் வளைந்தாட வென்னில்
வடிவுண்டோ  இளநங்கை போலே
நயன்தாரும் இன்பம் நல்குமோ உந்தன்
நினைவெங்கு எனைகண்டு தாயே
வியந்தோடும் வண்ணம் வினைவந்து தீர்ப்பாய்
விரைந்துவா உயிர் போகும் முன்னே
துயர்கொண்டு பாரில் துடிக்மென் நெஞ்சை
துணைகொண்டு வரம்நல்கு வாயே

செயம் கொண்டவீரன் செல்கின்ற பாங்கில்
சிரம்தூக்கி நடைகொண்ட வாறுன்
மயம்சக்தி என்றே  மனம் மகிழ்ந் தாடி
மலர்கொண்டு துதிசெய்வன் தாயே
கயமைக்கு தேடி கருவென்றே ஆக்கி
கசந்திடும் வாழ்வென்ப வேண்டாம்
புயலுக்குள் பூவாய் புரிகின்ற அன்பை
புறந் தள்ளு பகையென்ப தாமோ

முயலுக்கு தாவும் கயலுக்கு நீந்தும்
கலைசொல்லி வாழென்று விட்டாய்
வயலுக்கு நீரும் வானுக்கு ஒளியும்
வரச்செய்து வாழ்வென்று தந்தாய்
செயலுக்கு காலும் சிறப்பென்று கையும்
சிரிப்பென்று முகம் மலர்வாக்கி
அயலுக்கு நல்லோர் ஆயிரம்செய்தும்
அடியேனை ஏன்  வதைக்கின்றாய்?

******************************
*****

சக்தியே என் அன்னையே

 காலகால மாகத்துன்பம் காண்பதற்கென்றா யிரண்டு
கண்கள் தம்மை நீகொடுத்தனை
கோலமோ இழிந்துகெட்டு கோணலாக ஆடை போர்க்கும்
கேவலம் இத்தேக மீந்தனை
ஆலமே உள் எண்ணமாக ஆடியும்  துடிக்கு மென்மை
அற்புதப் பொறிக்குச் சக்தியே
நீலமே கத்தின் இருப்பு நிர்மலம் என்றான விட்டு
நெஞ்சங் கொல்ல வன்மை வைத்ததேன்?

மேளதாள வாத்தியங்கள் மேடைமீது நாட்டியங்கள்
மேனி கூடவோர் பெரும்விழா
ஆளவந்தவன் அழித்தும் ஆனந்திக்கும் போது இங்கே
ஆக்குவர் அதற்கும் பேரவா
மாளவும் எரிக்கும் நீயே மற்றவர் எரிக்கும் வண்ணம்
மாசுடர் அவ்வானில் வைத்தனை
கேளம்மா எத்திக்கிருந்து கோமகன் எரித்துமூடக்
கேள்வியே இல்லாதுவிட்ட தென்?

ஆளையாள் கலந்துசெய்யும் ஆளணிப் பெருக்கமூடே
அன்பிலார்க் கிங்கேது செய்பணி
வாளையும்தன் குட்டிகாண வாழ்வினை இழக்கு மாமெம்
வாழ்விலும் இதற்கென் றேன்விதி
கேளம் மாமலை யிருந்து கீழ்நிலம்பரந்த மண்ணில்
கோடிகோடி யாய்ப் பரந்தனர்
வாழவாயிவ் வையம்மீது வைத்தனை இல்வீழ்த் தவென்று
வஞ்சகர்க் குத்தீனி தந்தனை

சூழுமா அலைநிறைந்த சோதியும் தினம் உதிக்கும்
சூட்சுமங்கள் செய்த பாரிலே
தாளுமா என்வாழ்வு மின்பம் தாங்குமா இத்தோளும் பாரம்
தூங்குமா என்மேனி என்பதாய்
மீளுமா அப்போன வாழ்வு மீண்டுமே என்காட்சியாகி
மேனியும் சிலிர்த்து வாழ்வேனா
பாளமாய் உடைந்துகெட்டுப் போனதாய் வகுத்ததேனோ
பாரமாவென்  தூறல் பொய்த்ததேன்

தோளும்மார் பிலே தவழ்ந்து தூயநல் மொழிக்கென்றீந்து
தீரமும் கொள்ளென்று ஆக்கினாய்
தேளுமா பெரும் கொடுக்கன் தூங்குமாம் சுருண்டபாம்பு
தேவையா எம்பாதை வைத்தனை
மூளுமா உன்தீயும் எம்மை  மோசமாய் அழித்தவர்க்கு
மூடராம், இல்லாத மூர்க்கரின்
வாழுமா ஜனங்கள் வாழ்வில் வந்துமே இடர் அளிப்பர்
வானிருந்தும் காத்துக் கொள்வையோ

கற்றல் வேண்டும்!


 
கண்ணிரண்டு காட்சிதனைக் காணக்கொண்டும்
கலையுடனே கல்விதனைக் கற்கும்பேறில்
எண்ணிரண்டு விழிமேலாய் அறியாமைக்குள்
இருள்போக்கிப் பொருள்காண எடுத்தோர்களே
கண்ணிரண்டு நல்லொளியில் காட்சிகண்டும்
கருவிழியும் இமைமூடக் கறுப்பே தோன்றும்
மண்ணிலொளி வேண்டுமெனில் மங்காதென்றோர்
மதிகாணும் சுடரோங்கும் விடியல் வேண்டும்

எண்ணிரண்டு அடியெடுத்து முன்னேவைப்பீர்
ஏடெழுதும் கையாலே எம்மை நாசம்
பண்ணுபவர் கொட்டத்தை அடக்கும்வண்ணம்
பாரினிலே இன்தமிழைப் பரவல் வேண்டும்
தண்ணிலவின் ஒளிபாயத் தாயின்தேசம்
தன்னிலொரு செங்கீத மொலிக்க வேண்டும்
விண்ணிலுறை சக்திதனை வேண்டியின்று
விடிவுக்காய் கண்ணயரா உழைக்கவேண்டும்

பொன்மணிக ளெம்நாட்டிற் பொலிதல்வேண்டும்
பொல்லாதோர் விதிமாற்றிப் புதிதா யாளும்
நன்மதியும் நீளோங்க நாடும் வேண்டும்
நாற்திசையும் எல்லைகளைக் காத்தல் வேண்டும்
பன்மொழிக ளூடுதமிழ் பெருக்க வேண்டும்
பாரில் தலை சிறந்ததாய்ப் பண்பும் வேண்டும்
மன்னனென எம்தமிழர் கையில் செங்கோல்
மறமெடுத்து வழிநடத்தும் மாண்பும்வேண்டும்

அன்னைமடி மீதுதலை வைத்தேகாணும்
அன்புதனும் வேண்டும்நல் லமுதம் உண்டே
பொன்னிலவும் ஒடிவரப் போர்க்கும் மேகம்
புன்சிரிப்பி னோடுகண் டுறங்கல்வேண்டும்
நின் மனதில் அச்சம்விட் டுயரும் எண்ணம்
நேர்மையுடன்  தமிழ்காக்கும் நினைவுஞ்சேர
சின்னவனே சிந்தையிலே ஒன்றாய்க் கூடி
சிறப்போடு  செயலாற்றும் செழுமை வேண்டும்
**********************

Monday 21 October 2013

சக்தியின் சக்தி

     
தொம்தொம்தன தொம்தொம்தன என்றேபெரு விண்மீதினில்
நின்றே பெரு நடமே புரிவாள்
இம்மேதினிகண் கோடியில் பல்கோடியென் றெம்மேனியை
இங்கே உரு செய்தே தருவாள்
செம்மாலையில் அம்மேலையில் சென்றேவிழும் பொன்ஆதவன்
செய்காரியம் கொண்டான் எவரால்?
அம்மாபெரும் செந்தீயெழு பந்தானது விண்மீதினில்
அங்கோடிடச் செய்வாள் சக்தி!

வண்டானது செந்தேனையும் உண்டாகிட வைத்தாளவள்
அன்பானது கொண்டே உலகில்
கண்டானதும் ஓர்மாதினில் கண்பார்வையில் இன்காதலை
உண்டாகிடச் செய்வா ளிவளே
பெண்ணானவள் வன்பேசினும் முந்தானையில் பின்மோகமும்
கொண்டே நினைவொன்றாய் விடவே
மண்ஆண்டிடும் பொன்வேந்தனும் மைசேர்விழி பின்னேயுலைந்
தன்னோர்மதி கெட்டே யலைவான்
துண்டாடிடும் கூர்வாளதும் சிங்காரியின் கண்வீச்சினில்
எங்காகினும் வென்றாய் உளதோ
பெண்ணானவள் மென்மேனியும் சொல்லானதில் வல்லாண்மையும்
இல்லாயினும் வல்லாளெ னவாம்
கண்டோம் பல சாம்ராஜியம் கண்சாடையில் செவ்வாய்மொழி
கொண்டோர்அசை வொன்றில் அழிய
மன்னோர்களும் பொன்வார்முடி மண்மேல்விழத் தூள்ஆகிடச்
செய்வாளவள் சக்தி பெரிதே!

நெஞ்சில் அவள் எண்ணமெடு நித்தமவள் அன்பைநினை
நம் வாழ்வினில் சக்தி தருவாள்
பஞ்சாகிடும் துன்பங்களும் பட்டானதும் தொட்டானதும்
பற்றும் துயர் விட்டேவிலகும்
வெஞ்சீற்றமும் கொண்டேயவள் வெல்வாள்பகை கொல்வாள்,நினை
வேண்டும் வரம் ஈவாள் சுகமே
அஞ்சாமனம் கொண்டேநிதம் ஆற்றல்தரும் ஊற்றாகிடும்
அன்பாம்பெருவாழ்வும் உயரும்