Saturday 30 November 2013

எமதீழம் அன்றோ


மணிநாத ஒலிகூட்டும் மலர்விரிந்து நாறும்
பணிவோரின் இசைபக்தி பரவும் அதிகாலை
அணிசேரும் குருவியினம் ஆர்க்குமொலி கீதம்
தணியாத இன்பங்கொள் தமிழீழ மன்றோ

குளிர் தாரும் பெருவேம்பு முற்றத்தின் ஓரம்
புளி மாவின் பிஞ்சாய புரளும் கறை தேகம்
துளிவீழ மழைவெள்ளம் தோட்ட வரம்போடும்
களிகொண்டு சிறுவர்விடும் காகித மென் ஓடம்
நளினமிடும் நெற்கதிரும் நாடிவருந் தென்றல்
வெளி வானம் வீழ்ந்ததென விம்பம்தரும் குளநீர்
நெளிந்தோடும் நீரலையில் நீந்தப் பெரும் சுகமே
ஒளிகொண்ட விழிகொள்ளும் எங்கள் தாய் மண்ணே

எழில் வண்ணத் திருகோவில் திருவிழாக் கூட்டம்
தொழில் மாந்தர் துயர்போக்கும் சதிராட்டம் தாளம்
பொழில் தூங்கும் தாமரைகள் புனல் சந்த ஓசை
மொழி இன்பத்தமிழ் பேசும் மேன்மைநிறை ஈழம்

தாய்மண்ணைச் சூழ்கலிகள் தனைநீக்கு துன்பம்
போய்விடிவு காணவெனப் புறப்படு உன் தெய்வம்
தேய் வளங்கள் தனை நீக்கி தீரமுற செய்ய
 காய் கனியும்போல் கரமுகொள்ளும் இனிதேசம்
*************

Tuesday 26 November 2013

அந்தநாள் வந்திடாதோ?

செஞ்சுடர் தோன்றிடக் காலையெனும் ஒரு
திருநாள் விடியாதோ - மனம்
அஞ்சிடும் மாந்தரின் வாழ்வினிலே  ஒரு
அறநாள் எழுமாமோ - விழி
கொஞ்சிடும் மாதரின் காளைகளின் சிறைக்
கூடங்கள் திறவாதோ - இனி
மிஞ்சிடும் நாட்களில் வாழ்க்கை யெனும் அந்த
மென்மலர் பூக்காதோ

பஞ்சினில் தீயிடும் பாதகரின் கரம்
பாழ்படப் போகாதோ - உயிர்
தஞ்சமென் றுன்னிடம் வந்தவரும் தலை
தப்பிட வாழாரோ - உள்
நெஞ்சமதிற் கனல் தீயெழுந்தே யவர்
நினைவது2ம் சிவக்காதோ -  மனம்
துஞ்சிடும் மாதரும் துயர றுந்தே உளம்
தென்றலென் றாகாதோ

கஞ்சியும் கூழெனக் குடித்தாலும் அவர்
கண்ணிய வாழ்வினிலே -  தினம்
பிஞ்சுடன் பூவென உயிர்வாங்கும் எமன்
போதுமென் றேகானோ -  துயில்
மஞ்சமும் இரத்தமும் சதைகளின்றி மலர்
மணந்திடப் காணாதோ - இனி
எஞ்சிய நாட்களில் இருளகன்றே  ஒரு
இளவெயில் தோன்றாதோ

சஞ்சலம் போயும்நல் வீரமெழத் தமிழ்ச்
சுதந்திர இசைபாடி - வண்ணக்
குஞ்சரங்கள் எழில் மாலைதொங்க நற்
கோலங்கள் ஆகாதோ - கொடு
நஞ்சிடை மனமெனக் கொண்டவர்கள் எம்
நற்றமிழ் அன்னைதனை - தன்
அஞ்சுடை வயதினில் கற்றதென்றே அவர்
ஆற்றலில் திருந்தாரோ

செஞ் சிவப்பாகிய வானமதில் அச்
சுந்தர சூரியனும் - ஒரு
கஞ்சமின்றி யொளி வெள்ளமிட எம்
கனவுகள் பலியாதோ
புஞ்சைநிலம் வயல் பூமியெல்லாம் -நிலை
பொன்னெழில் பூத்தாக - உனைத்
தஞ்சமென் றடைந்தோம் தாயவளே எம்
தமிழ் நிலம்  விடியாதோ?

நினைவே , நீ ஏன் இப்படி?

மனங் கொண்ட நினைவேநீ எதிர் ஆனதேன் - என்
மடிமீதில் உறவாடும் நிலை போனதேன்
கனம் கொள்ள இதயத்தில் சுவடாக்கினாய் - பின்
கனவென்றே தொலைசென்று  மறைவாகினாய்
தனமென்று பொருள்தானும் எதுவேண்டினை - அதைத்
தரவென்று நினைந்தாலும் உரு நீத்தனை
மனதோடும் உறவாடிச் சுகம் தந்தனை- இன்று
மலர்கின்ற விதம் இன்றி மறந்தோடினாய்

இரவென்ன பகலென்ன இனிதாகினோம் என்
இதயத்தில் எழுந்தேநீ எனைஆண்டனை
வரவென்ன நினைவோடு வழி சென்றவன் - இன்று
வரைவின்றி உளம்நொந்து விழிகாக்கிறேன்
பரவும் நல்லொரு காலை பிரிந்தோடுவோம் - நிலம்
பனிகொண்ட புல்மீது நடந்தோடுவோம்
தரவும் பல் லுரைகொண்டு வருங் கற்பனை - அதை
தரம் கொண்டு தரவே என்தமிழ் போற்றினேன்

பனிதூங்கும் மலர்மீறும் எழில் கொண்டவா - எனைப்
பார்க்காமல் மனம்தொட்டு துணை நின்றவா
இனிப் போதும் என்றாலும் உணர்வீந்தனை - இவ்
இகம்மீது ஏன் வாடும்செயல் தந்தனை
புனிதமென் றுயர்வானப் பொழுதாகியும்  - எனைப்
போகின்ற இடமெங்கும் உடன் வந்தனை
மனிதத்தின் உணர்வென்னும் தீ மூட்டியே - அவர்
மகிழ்கின்ற பொழுதேனோ  உயிர்வாங்கினாய்

குளிரென்றே அணைவாய் பின்கணம் மாறுவாய் - என்
குரலாகப் பிணைந்தோடிச் சினம்கொள்ளுவாய்
ஒளிபோன்று மதிகொண்டே புதிர்போடுவாய் - பின்
உறக்கத்தில் உயிர்தூங்க விடை கூறுவாய்
அளி யின்பம் எனவ்ந்து கவி சொல்லுவாய் - பின்
அழிஎன்று பயம்கொள்ள மருண்டோடுவாய்
புளிமாவின் கனிகாணும் சுவை தந்தபின் இப்
புவிகொள்ளும் சுதந்திரம் தனுக் கேங்கினாய்

அதிகாரம் கொண்டங்கே அரசோச்சினான் -  அங்கு
அடிமைக்கு நிகரென்று பணியாற்றுவாய்
அதி காரச் சுவையாகி உயிர் கொல்லுவாய் - பின்
அதைப்போலும் உயிர்கொள்ள அவள்பேணுவாய்
குதித்தோடிக் குணம்கொண்டு குலம்காத்திடும்  - உன்
குறைஏது தினம்மாறிக் கணம் வேறென்பாய்
புதிதென்று எதைஎண்ணிப் போய்வாழ்விலே - அந்தப்
பேய்களின் மனம்தாவிப் பலியாகினாய்?

சேர்ந்து நில் விடிவு வரும்

மலர் தூங்கும் பனி மண்ணில் வீழும் - பூ
மணம் ஏந்தி இளந்தென்றல் அலைந்தோடக் காணும்
புலர்கின்ற பொழுதான யாவும் - நம் 
பொன்னான தாய்மண்ணின் புதுமை என்றாகும்
சிலர்வந்து தாய்நிலம் பற்றி - எம்மைச்
செல்லென்று காட்டிடை சிறையிட்டு வைத்தால்
இலதென்று ஆகுமோ வீரம் - நாமும்
இருந்தழும்  நிலை  காண மீளுமோ தேசம்

கலை ஒன்றித் தமிழ் இன்பம் காணும் -  நற்
கனி போலும் சுவை எங்கள் தமிழீழ வாழ்வும்
உலைபொங்கும் வயல்கொண்ட நெல்லும்  - விதை
உழவர்தம் வியர்வையும் உதிர்கின்ற மண்ணும்
நிலை கொண்ட  எம் தேசம் வேண்டும் -  அதை 
நீர்வார்த்து தருமமென் றளிக்கவா நானும்
மலைபோன்று இடர் வந்தபோதும்-  நாமும்
மறுபடி கொள்வோமோ எமதன்னை நாடும்

சிலபூக்கள் குளம் தன்னில் ஆடும் - அதில்
சிந்தாமல் வண்டொன்று தேனுண்டே ஓடும்
வலைதன்னில் மீன்வந்து வீழும் -அதை
வாரிக் கரைபோட்டு விலைகூறு வோரும்
தலைசீவிப் பூச் சூட அன்னை - அவர்
தாயாம் என் பாட்டியின் கதை சொல்லும் தன்மை
நிலைகொண்ட நாம் வாழ்ந்த  மண்ணை -  இன்று
நீசர்தம் கைவிட்டு மீட்பதே வேலை


தொலை என்று வந்தாளும் பகைவன் - அவன்
துண்டுதுண்டாய் ஆக்கத்  துணைநின்ற உலகம்
மலை போலும் தமிழ் வீர மாந்தர் - இவர்
மாளென நஞ்சிட்டுக் கொன்றதோர் கோலம்
குலைகுலை யாகவே வெட்டி - அவன்
கும்மாளம் போட்டாடக் குவலயம்சுற்றித் 
தலை கீழென் றுருண்டோடும் பூமி  - நாமும்
தருமத்தைக் கேட்டிடிட எவருண்டு மீதி

மொழி ஒன்று தமிழ் எங்கள் அன்னை - இதை
மறப்பதோ ஒன்றாகு,  மதியூகம் கொண்டே
வழி கண்டு சென்றிட வாழ்வாம் -நூறு
வகையான வழிகாணில் பிரிவொன்றே மீதாம்
தெளிகின்ற மனதோடு உறுதி - அதை 
தேர்ந்து நீ சரியான திசைகண்டு சென்றால்
பழி வென்று தீர்வாகி விடியும் - நீயும்
பயமின்றி வாழ ஓர் விடியலும் தோன்றும்.



******************************
**

நட விடியல் தோன்றும்


மலராத மலரெங்கும் உளதோ - மறுபடியும்
புலராத விடிகாலைப் பொழுதோ - மதுமலரில்
உலவாத வண்டினமெங் குண்டோ  உயிருடலை
விலகாது  தமிழ்காத்தல் தவறோ
தொடராத நிழல் தானும் உளலோ - மரம்மீது
படராத கொடி வளரத் தகுமோ - பின்னாலே
இடராக வந்த பெரும்  பகையோ - இவர்வாழ
விடலாமோ எம்தீழம் பொதுவோ

கடலோடிச் சூழ்நிலமும் எமதே -  இதைவந்து
தொடலாமோ அந்நியனை விடவோ - மெய்கீறி
குடலாக இவன் உருவ சடமோ - நம்விழியில்
படலாமோ விடநாமும் முடமோ


அறமின்றி அநியாயம் பலமோ- அடிமையென
மறமின்றித் தமிழ் மாந்தர் கெடவோ -கொண்டகுவை
துறவென்று மனை விட்டு செலவோ- வந்தபகை
உறவென்று நிலம்கொள்ளல் தகுமோ

சுடும் தீயில் வெந்தழியும் வாழ்வைப் - புதிதாக்க
எடுஎண்ணம்  உயிராய் மண்நேசி - இன்றுவிடில்
வடுவாகும் உனது பெருவாழ்வும் -  கடமைதனைத்
தொடுவீரமொடு   விடியல் தோன்றும்