Saturday 30 August 2014

குடைவானம் கூப்பிடுதூரம் (கவியரங்கில் இடம்பெற்றது)

நிலவெழுந்து  புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்
நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர்  ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக்  கண்டேன்
ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்
பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்
முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற்  பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்
கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்
உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்
ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

கனவு முடிந்தபோது அவள்..!

அன்று: 

இளங்கனி சுவையும் இதழ்மலர் அமுதும் 
எடுத்துரை மொழியும் இனிதெனும் ஊற்றாய் 
தளதள பருவம் தலை நிறை கேசம் 
திடமுறு விழிகூர் தெறி குளுபார்வை 
குளமலர் விரிவாய்க் குமுதமென் வதனம் 
குட வளை யிடையில் கொடிதெனும் நளினம் 
அளவில சுகமென் றைம்புலன் துய்த்தே 
அகிலமும் நிலையென் றறிவழிந் திருந்தோம் 

இன்று: 
அழகுறு குழலோ பனிமலை வடிவாய் 
விளைகடல் சங்கின் இயல்நிறம் மருவி 
குழலுடை இனிதாய் குரல்தரு மென்மை 
அளவினில் மெலிதாய் அகமிடை தளர 
நிழல்தரு தண்மை நிகரிளம் மேனி 
பொழிலுடை அலையின் பொலிவடிவேந்த 
கழலுறு மணியின் கலகல நாதம் 
முழுதென இலதாய் மெதுநடை பழக 

சுழலொரு புயலின் செறிவலி குறுகி 
தழலெழ மனதை தகித்திட வைத்தாள் 
முழமொரு பூவை முகர்வினில்வாசம் 
எழ முடிவைத்த இயல்பது கனவாய் 
தளதளமேனி தகையிளந் தாடத் 
துளைவிழி யம்பு தொடுவலி குன்றிச் 
சுளை பலகனியின் சுவையிவள் அதரம் 
விளை வெனும் புகழும் விரயமென்றாகி 

தடிகரம் கொண்டே தவழ்ந்திடும் மழலை 
அடியெடு நடையும் அருகிட விழல்போல் 
துடிசெய லடங்கித் துறுதுறு பார்வை 
வெடித்திட முயலும் வெறியுணர் வோய 
கொடியிடை ஒடிவும் கணை மதன் மலரும் 
வடித்திடு சிலையாய் வந்தவள் இன்றோ 
அடித்திட அரவம் அதன் கிடைபோலே 
நடித்திட வைக்கும் நயன் கெடுவாழ்வில் 

எடுத்திட முடிவாய் இளமையை நம்பி 
துடுப்பிழந் தோடம் திசைவிடும் நிலையாய் 
தடுப்பிழந் தலைகள் தொடத் தொலைவாகி 
கொடுத்தோன் பறிக்கும் குயவனின் கலயம் 
அடுத்தெனும் உடலை அமுதுகொண் டேற்றி 
விடுத்து நீரூற்றி வீம்பினில் திழைத்துப் 
படுத்திடக் கனவும் பகலினில் தினவும் 
எடுத்துண்மை அறியா இருளிடை வாழ்ந்தோம் 

வெய்யினில் காய்ந்து விழுமழை புரவி 
பொய்யினில் வாடி புறந்தள்ள ஓடி 
செய்வினை வஞ்சம் திரிந்திடமொழிந்து 
கையினில் களவும் கனிமலர் பேச்சும் 
மைவிழி மாதர் முனைந்தயல் கொண்டு 
மெய்யிடை ஈரம் மிகச் சுவைகண்டு 
தெய்வம் மறந்து திருமலர்ப் பாதம் 
உய்வது விட்டே உலகிடை நலிந்தோம் 

...............................

Wednesday 27 August 2014

அறிவொடு துணி!

      

கட்டுகடங்கா திடம்கொண்ட நற்
காளையர் கன்னியரே- துயர்
பட்டுத்தெளிந்திடல் பயனன்று முன்
பார்த்துச் செல்வீரே
தட்டுபடுவது கல்லென்றால் அதில் 
தாங்கா வலிகொண்டு
கிட்ட கால்செலும் நிலை முன்னே அக்
கேட்டைத் தவிருங்கள்

சொட்டுங் குளிர்மழை மேகம் வரும்- அதன் 
சில்லென் றுணர்வோடு
விட்டுத் தெளித்திடும் நீர்த்துளிகள் - அது 
விந்தை மகிழ்வாக்கும்
சட்டசடவென இடி முழங்கும்  அதைச்
சற்றும் எதிர்பாரா
அட்டத் திக்கிலும் கதிகலங்கப்  புயல் 
அமளிப் படுத்திவிடும்

மொட்டும் பூக்களும் நிறைசோலை தனும்
மேதினி வாழ்வல்ல
வட்டப் பூவிடை தேனுண்ணும் ஓர்
வண்ணப் பூச்சியதன்
பட்டுபோலும் மென்மைகொளும் எழில்
பாங்கும் இதுவல்ல
முட்டித் துயர்தரு மாவிலங்கும் வழி 
முன்னால் தெரியும் பார்

தொட்டுக் கொண்டபின் தொலையும் என்றே
தீமைக் கரு`மை`யில்.
விட்டுக் கைகளை மாசாக் காதே
விளவைப்  பார் தீமை
கொட்டிக்  கரங்களில் திட்டுதிட்டென
கொள்ளும் அடையாளம்
பட்டுப் பாடென ஆகிய பின்னால் 
பயனென் இலையாகும்

முட்டக் கொம்பொடு  மோதும் எருதுவும்
மூர்க்கத்துடன் வாரில்
கிட்டத் தெரிந்திடக் கட்டிப்புரள்வதை
கைகொண்டால்  நீயும்
நட்டந் தனையே நல்கும் விலகிடு
நாளும் பொழுதோடும்
திட்டந்தனை நீமாற்றிக் கையெடு
தெரியும் இலக்காகும் 

அச்சம் படுமிடம் ஆயின் அஞ்சுதல்
அறிவுக் கிடமாகும்.
துசசம் செய்ததை தூசென்றெண்ணிடில்
துயரம் வரக்கூடும்
உச்சம் எதிரியின் பக்கமென்றிடில்
உள்ளத் தெளிவோடு
நிச்சயம் வெற்றி என்றோர் வழியை
நிறுத்தி உள்தேடு

அச்சமென்பது மடமையெனில் அது 
அறிவின் துணையோடு
உச்சிப்பெரு வெயில்  எரியும் அதுபோல் 
உள்ளக்கனல்கொண்டு
பச்சை புல்வெளி பரவும் காற்றும் 
புயலென் றாதல்போல்
நிசயம்வெற்றி உனதே கேள்நன்
நெறியிற் வாழ்வாக்கு

இடைவெளி


தமிழ்தனை மறந்திடத் தரவுகள் மறுத்திடும்
தகமையைப் பெறுவதுண்டோ
குமிழென அலையிடை கொளும் வடிவுடைவென
குறுகியும் சிறுப்பதுண்டோ
அமிழ்திலுமினியது அகமதில்  சுவைதமிழ்
அவனியில் வெறுப்பதுண்டோ
நிமிர்ந்திட சிலதடை நினவுகள் கழிகின்ற
நிதர்சன இடைவெளியோ

பலவித நினைவுகள் பறிமுதலிட விதி
பகலிடை ஒளிநிலவாய்
புலமைகள் சிறுபட புதுமைகள் தலைப்பட
பொழிதொன்று கழிகிறதோ
குலமொளிர் மனமதின் குணநலம் புரியுதல்
குறையெனை இருந்துவிடில்
சலசல அலைகளில் சதிரிடும் ஒலியென
சலனங்கள் எழும் இதுவோ

வலதுகை எழுதிட வருவது இடதுகை
வரைமுறை அறிவதில்லை
பலமது புஜம்கொளப் பதறிடும் பாதங்கள் 
பகைவனுக் குலகல்லவோ
நலமென இருவிழி நடுவழி இடர்தனை
நிகழ்வினில் புரிவதுண்டு
விலகியும் ஒருவிழி வெறுமையை காணென
விலைதரும் செயல் அழகோ

துலங்கிடும் ஒளியது தரும் பொருள் மறைத்திடின்
தொலைவது எழிலுலகே
நலமொடு இருப்பது நடந்திட அருள்தனை
நல்குவ தவள் தனியே
கலகல சிரிப்பெழக் குழந்தையின் குணமல்ல
கொடுவெயி லெரிகிறதே
சில சில அமைதிகள் செறிவென இருந்திடில்
சடவென அதிர்வெழுதே

வழித்துணை யல்லப் பெரு வழக்கமென் றிணைந்தபின்
வகுப்பது கழித்தலொன்றே
குழிக்குள்ளும் விழுத்திடும் குவலயத்திடை மனம்
கொடுப்பது கரமல்லவே
விழிப்பது விழியல்ல வெகுமன மெனிலதை
விகடமென் றெடுத்திடவோ
செழிப்பது பயிரெனில் சிறிதெனும் உயிர் வகை
சிரித்திட நசுக்குவதோ

ஒளி தேடும் உள்ளம்


வெண்ணொளி கொள்ளெரி வெய்யவனின் கனல்
வீறுடன் எழுமோர்காலை
கண்ணொளி முன்விரி காட்சிகட் புலனிடை 
கைதொட மீட்டிடும் வீணை
மண்ணிடை தோன்றிடும் மாயவி நோதங்கள்
மெல்ல விரித்தியல் அன்னை
எண்ண மெனும் ரதம் ஏற்றிவிட்டாள் மனம்
ஏறிக் கடந்தது விண்ணை 

மண்ணிடை பூத்தன மாமலர்கள் மது
மாந்தியதோ மனபோதை
பெண்ணின் துணைதரும் பின்னல்இயற்கையின்
பாசமெனும்  நீரோடை 
தண்மை தனில் சுடும் தாகம்,எடுத்திடும்
தன்மை யுடன் இகவாழ்வை
எண்ணியுளம் சிலிர்த் தோடிப் பறந்திடும்
இன்பமிதோ எனும்வாழ்வை

சுண்ண மெடுத்திடை பூசியதாய் நடை 
சோர்ந்து கிடந்திடும் மேகம்
வண்ணமலர்ப் பொழில் வாவியில் நீந்திடும் 
வட்ட அலைத்தா மரையும்
கிண்ண மதில்தொடக் கொட்டியதாய்ச் சிமிழ் 
குங்குமச் செவ்வடிவானில்
திண்ணமெடுத் தழல் தீயெரி வானிடைச் 
செம்மைகண்டே அசைந்தாடும் 

புள்ளினம் துள்ளிடுங் காலை  புதுமணம் 
பொங்கும்  சுதந்திரக் காற்றும்
அள்ளியிறைத் திடுநீரும் வயலிடை 
ஆடும் கதிர்களின் நாணம்
கொள்ளை யிடும் மனமாற்றம்  அதனிடை 
கூவும்குயில்களின் தோட்டம்
எண்ணவுள்ளே மனம்கொள்ளுந் துயர்விட
இன்பமென்றேமனம் ஆடும்

துள்ளி விழும் அலைக் கூட்டம் கரைதனை 
தொட்டகணம் விட்டோடும்
வெள்ளி மலைகளின் வீறும் கொள்திடம் 
வேண்டியதோ மனதீரம்
தெள்ளென நிர்மல வானடியோரத்தில்  
தோன்றிடுதோ மழைமேகம்
.உள்ள கலை உணர்வோங்க இயற்கையின் 
ஓங்குமொளி தனை வேண்டும்

Tuesday 26 August 2014

நன்றிகள் அன்னையே!

          
தென்னைமரங்கொண்ட தோப்பினிலெ ஒரு
சின்னக் குடிசையம்மா -அங்கு
தென்றல் வந்து தினம் தொட்டணைக்க மனம்
தீயழ கெண்ணுதம்மா
கன்னம் வழியும் ஓர்சின்ன குழந்தையின்
உள்ளக் கவலையம்மா -அது
என்ன விநோதமோ உன்னை நினைக்கையில்
இல்லையென் றாகுதம்மா

அன்னை முகம்தன்னில் உந்தன் ஒளிகண்டு
புன்னகை கொண்டிருந்தேன் -அதில்
அன்பெனும் தன்நிலை காண அளித்தவள்
இன்றரு கில்லையம்மா
சொன்ன சொல்  எப்படி உன்னையடைந்தது
மின்னற் பொறிகளென்றா - இந்தத்
தன்னிலை கெட்டவன் தானுயர்வாகிடும்
தன்மை கொடுத்தாயம்மா

சின்னக் குழந்தையும் கொள்ளக் கருவினில் 
அன்னை வயிற் றுதைக்கும் - அது
பின்னர் பிறந்ததும் பெற்றவர் கொஞ்சிட 
இன்னும் நெஞ்சில் உதைக்கும்
அன்னை மனம்கொண்ட அன்புபெருகிட  
அள்ளி அணைப்பதெல்லாம் -இந்த
சின்னச் செயலதில் உள்ளங் கன்றி என்றும் 
அன்னை வெறுப்பதுண்டோ

முன்ன மறிந்திட வில்லையிது புது
மேதினி யென்றறிந்தேன் -இதில்
வன்மையுடன் பல நன்மைகளும் கொண்டு
வட்ட சுழல் நிலையாம்
    தன்னில் அலைந்திடும்  இந்த மண்ணில் வந்து
    தத்தித் தவழுகிறேன் - எந்தன்
சின்ன விழிகளில் மின்னிஎழும் சக்தி
செல்ல உணர்வு கொண்டேன்
 
கண்கள்முன்னே பலகாட்சிகளின்பெரு
வண்ணக் கலவை மயம்’- இதில்
உண்ணும் கனிதனை  இட்டதருவினில்
   ஓசையிடும் குருவி
   எண்ணமினித்திட இன்னிசை தந்துமே
விண்ணில் பறக்கும்படி -அதை
திண்ணமுடன் மகிழ்ந்தாட விதித்தவள்
தேடிச் சுகமும் தந்தாள்:!

இன்னும் கொஞ்சம் கொஞ்சம்


பொன்னெடுத்துப் போடச் சொன்னதில்லை - வாடும்.
பூத்தொடுத்த மாலை கேடகவில்லை
மின்னுகின்ற பட்டில்ஆடை கொண்டே - எந்தன்
மேனியெங்கும் போர்க்கக் கேட்கவில்லை
தின்னவென்று வெல்லமிட்டுப் பொங்கி - அதில்
தேனை வார்க்கக் கேட்கவில்லைத் தாயே
என்னை யிந்தப் பூமி கொண்டு சுற்றும் - போதில்
இன்னலை உவக்கும் வாழ்வு கேட்டேன்

தென்றல் வீசும்சா மரைகள் கொண்டே - இந்தத்
தேக வெம்மை ஆற்றக் கேட்கவில்லை
மன்றம் ஒன்றமைத்து மன்னனாகி - வாழ
மண்டபங்கள் ஏதும் கேட்கவில்லை
ஒன்றி ஆசை கொண்டு தேக இன்பம் - காண
ஓர்கிழத்தி யன்றிக்கேட்டதில்லை
வென்று பூமி என்னதென்று  ஆடும் - அந்த
வேடிக்கை உணர்வு கேட்டதில்லை

குன்றின் மீது கோபுரங்கள் கட்டி - அங்கு
கொண்டு வைத்துகூடி யாடிக்கண்டு 
நின்ற தேரில் தூக்கிவைத் துருட்டி - சுற்றி
நீளுருண்ட பாதை  ஓடவிட்டு
சந்தசமு மிசைத்த பாடல்  சொல்லி - உன்னைச்
சற்றிணைத்த கைகள் கூப்பி நிற்கும்
விந்தையை மறந்ததாலே இன்று - என்னை
வேதனைக் கென்றாக்கினாயோ சொல்லு

அன்பு கொண்ட ஆவியொன்று தந்தாய் - அதில்
ஆவிநோத சூட்சுமங்கள் செய்தாய் 
தென்பு தந்து தேடு வாழ்வையென்றே - எட்டு
திக்குமோடி தெய்வம் காணச் சொன்னாய்
என்பின்மீது இச்சை தந்திறைச்சி - அதில்
ஏறியோடும் இரத்தவாடைபூசி
நன்மையோடு தீது செய்யும் எண்ணம் - தந்து 
நானிலத்தில் வாழவிட்டபின்னர்

புன்னகைத்து நானுவந்த போது - என்னைப்
போயிருந்து கூறு வார்த்தையென்றாய்
என்ன கைத்து இச் சிறப்பை விட்டாய் - நீயும்
ஏழைமீது வன்முகத்தைக் கொண்டாய்
சின்னகை துடித்து காற்றில் ஆட - ஓர் 
சித்திரம் வரைந்து காட்டு என்றாய்
பன்முகைத்த பூவின் வாழ்வென் றீந்து - என்னை
பரிகசித்து நின்றதேனோ சொல்லு

தன்னலத்தில் கேட்கவில்லைத் தாயே - நேர்மை 
தாண்டியும் நடக்கவில்லை பாரேன்
முன்நிலத்தில் சுற்றும் பம்பரத்தை - எந்தன்
மேனிகொண்டு ஆடவிட்ட பின்பு
மென்குளத்தில் நீரலைந்து காண - அதில் 
மீண்டும் கல்லெடுத்து வீசக் காணும்
இன்னலுக்கு என்னை ஆக்கவேண்டாம் - தேவி 
இன்னும் கொஞ்சம் வாழ்வென் றீயக்கேட்டேன்

*************

ஆற்றாமை தீர்


தென்றலை ஊதென்று தள்ளியவள் இந்த
தேகத்தை ஊதியும் கொள்ளென்றவள்
இன்றலை என்றென்னை விட்டது மேன் - உள்ள
இன்பங்களைக் கொன்றும் விட்டது மேன் 
குன்றலை பூந்தென்றல் கொண்டுருத்தி - பல
கோடிமலர்களை  புல்லிறைத்து
அன்றில்லை இன்றும் அயரவைத்துப் -பின்னர்
ஆதவன் கொண்டடல் சுட்டது ஏன்

மன்றினில் சொல்தமிழ் மாறியதோ  - இல்லை
மாபெரும் அண்டத்தின் மாயவளோ
கொன்றிடில் ஓர்தினம் கூச்சலெழும் -இது
கூடியெனைத் தினம் கொல்வதுஏன்
தின்றுமே தொண்டையில் சிக்குமன்னம்  உள்ளே 
சென்றிடவும் இல்லை வந்ததில்லை
என்றும் உயர்துன்பம் தந்துவிட்டாள் இது 
இப்படி யென்னையும் வாட்டுவதோ

வாழ்வதும் மேலுயர் வென்பதெல்லாம் ஒரு
வண்டியின் சக்கரம் சுற்றுவதாய்
வீழ்வதும் வீழ்ந்து மெழுந்த பின்னர் ஒரு 
வேடிக்கையாய் சுற்றக் காணுகிறேன்
ஆள்வதும் அன்னையென் றாகிய பின் அந்த 
ஐவிரல் கள்குவித் தாதரவாய் 
வேள்வியில் இட்டொரு நெய் உருகும் தன்மை
வீட்டெனைக் காத்திட வேண்டுகிறேன்

அள்ளவும் நேரற்றுப் போகவில்லை அந்த 
ஆழ்கடலும் குறைகாணவில்லை
துள்ளும் இதயத்தின் உள்ளநிலை  அது
துன்பமெனச் செயல் கொள்ளும் நிலை
புள்ளினம் போகின்ற வானத்திலே  எங்கு 
போயிருந் தாளோகண் காணவில்லை
அன்னையென என்னை அன்புகொண்டேயவள்
ஆற்றாமை தீர்த்திட வேண்டுகிறேன் 

கரம்தா தேவி

புழுவின் வதையும் புனலின் அலைவும்
மெழுகின் உருகும் மிதமென் தகையும்
கழுவின் அமர்வும் கரவின் கேடும்
பழுவின் சுமையும் பார்க்கின்றேன் நான்

எழுமின் இடியும் இடரும் தென்றல்
முழுவன் புயலாய் முயலும் விதியும்
தழுவும் தீயின்  தகிப்பும் வாடும்
அழகின் மலராய் அடியே னாமோ  

எழுதும் கோலை எடுக்கும் கைகள்
பழுதும் கொண்டோர்  பயனைப் போலும்
தொழுதும் உள்ளம் துன்பம் குறையா
அழுதும் கண்கள் சிவக்கின்றேன் யான்

விழுதும் அற்றோர் பழமை தருவின்
விழுமோ என்றோர் வியப்பின் தரமும்
உழுதுண் மகனின் உரிமைத் தனமாம்
கழி மண் சேறாய் காணல் தகுமோ

நிழலுமற்றோர் நிலைமை தரவா
அழலின் உணவாய் அழியும்படியா
மழுவும் உடுக்கை மறுகைக் கொள்ளும்
தழலின் விழிகொள் தலைவா எண்ணம்

பழமும் கனியப் பனிமண் வீழும்
கழனிக் கதிரும் காலம் நீங்கும்
வழுவில் கணிதம்வைத்தே அண்டம்
சுழலும் சக்தி சொல்லாய் காப்பாய்