Tuesday 20 January 2015

நான் இருந்தால்...?


ஏழு வண்ண மாளிகைமுன் இரவினிலே விளக்குமின்றி
எப்படியோ நானவனைக் கண்டேன்
தாழுமுயர் மேகமிடை தானும் விளையாடியவன்
தான் ஒழிக்கத் தேடியறி என்றான்
வாழுமுல கென்னிலவன் வந்தொழியும் இடமறிவேன்
வானத்திலே எப்படி நான் என்றேன்
தாழும் முகி லோடுமட்டும் தன்னிடத்தி லில்லையெனத்
தலையசைத்து நான் மகிழ்வுகொண்டேன்

ஓடியெழுந்தே மறைய உடனெழுந்து தேடுகிறேன்
ஒர்முகிலும் நேருருவம் காட்டா
நீடியைந்த ஊர்வலத்தில் நேர் பறந்துசெல்ல மனம்
நிர்கதிகொண்டென்ன செய்ய என்றேன்
தேடியும்நான் காணவிலை திசையெதனப் புரியவிலை
தேவிமனங் கொண்டுதவாய் என்றேன்
நாடி யொருதீ யெழவும் நல்லொளிர்ந்த சோதியிலே
நான்மயங்கக் காதில் ஒன்று சொன்னாள்

பூஇருந்தால் தேனிருக்கும் தேனிருந்தால் பூவினுக்கும்’
தேடும் வாழ்வில் ஆசைகொள்ளத் தோன்றும்
நாவிருக்க ருசியிருக்கும் நானிலத்தில்  ஈதுவிதி
நானிருக்கும் போது சொல்லிப் போனாள்
நீயிருக்க நானிலையேல் நின்னுருவம் காணுவனோ
நானிருந்தால் தானறிவேன் என்றே
நானில்லையோ நீயில்லையோ நானறியேன் காணவில்லை 
நானிருப்பதோ இல்லையோ என்றேன்

நானில்லை நான் எங்குமிலை என்னையும் நீ காண்பதென
நேருவதும் இல்லையென்று சொன்னான்
தானிருக்கும் இடமறிந்தேன் நேர் நடந்து கண்டவுடன்
தான்மனதில் கோபங்கொண்டு நின்றான்
நான் இலையே நன்கறிவேன் நீயுமெனைக் கண்டதென்ன
நானறியேன் என்றவனைகண்டு
நீயிருக்க நான்இலையேல் நெஞ்சில்தெய்வம் காணுமங்கே
நிசப்தமே நிகழ்ந்திருக்கும் என்றேன்

பூசிரிக்கும் புன்னகைக்கும் போதில் ஒலி தோன்றுவதில்
போலிருக்க வேண்டும் நினதுள்ளம்
வாயிருக்கும் வார்த்தைகளில் வந்துமௌனம் குடியிருக்கும்
வாழ்வி லுன்னை விட்டுநானும்போனால்
தேய்விருக்கும் உயர்வுவரும் தேடும் விழி சாந்தமெனும்
தெய்வசுகம்  ஒன்றுமட்டும்காண
தாயெனவே அன்பிருக்கும் தமிழ்கனிந்த மொழியிருக்கும்
தாங்குமனம் தெய்வ மன்றோ என்றாள்

No comments:

Post a Comment